கர்நாடக மக்களுக்கு... தேர்தலை முன்னிட்டு வெளிப்படையான கடிதம் எழுதிய பிரதமர் மோடி


கர்நாடக மக்களுக்கு... தேர்தலை முன்னிட்டு வெளிப்படையான கடிதம் எழுதிய பிரதமர் மோடி
x

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. பேரணி, பொது கூட்டம் போன்றவற்றை நடத்தி வாக்குறுதிகளை வழங்கின. கட்சியின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், என் மீது நீங்கள் எப்போதும் அன்பும், பாசமழையும் பொழிந்தீர்கள். அது எனக்கான ஒரு தெய்வீக ஆசீர்வாதம் போன்று நான் உணர்ந்தேன்.

நமது பேரமுத காலத்தில், இந்தியர்களாகிய நாம், நம்முடைய அன்பிற்குரிய நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான நோக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்.

அந்த தொலைநோக்கு பார்வையை உணரும் வகையில், இந்த இயக்கம் முன்னெடுத்து செல்லப்படுவதில் கர்நாடகா ஆர்வமுடன் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

கடிதத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து, 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய அடுத்த இலக்கு டாப் 3-க்குள் வரவேண்டும். இதற்கு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தில் விரைவாக கர்நாடகா வளரும்போதே, அது சாத்தியப்படும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், பா.ஜ.க. அரசின் கீழ், வருடத்திற்கு அந்நிய முதலீடாக ரூ.90 ஆயிரம் கோடி கர்நாடகாவுக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு முந்தின அரசாங்கத்தின் கீழ் அது ரூ.30 ஆயிரம் கோடியாகவே இருந்தது.

கர்நாடகாவை முதலீடு, தொழிற்சாலை மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் நம்பர் ஒன்னாக உருவாக்குவதுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிலும் நம்பர் ஒன்னாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என அவர் கடிதத்தில் சுட்டி காட்டி உள்ளார்.


Next Story