மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரம்: முதியவர் அடித்து கொலை; மகன் கைது


மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரம்: முதியவர் அடித்து கொலை; மகன் கைது
x

மது அருந்த பணம் கொடுக்காததால் முதியவரை அடித்து கொன்ற அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;

தகராறு

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா கத்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 60). இவரது மகன் திப்பேஷ். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திப்பேஷ், தந்தை மஞ்சுநாத்திடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தத்துடன் திப்பேசை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த திப்பேஷ், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தை மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத், ரத்தவெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திப்பேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்னகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மது அருந்த பணம் கொடுக்காததால் தந்தை மஞ்சுநாத்தை திப்பேஷ் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய திப்பேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story