ராகுல் காந்தியின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி: காங்கிரஸ் கருத்து


ராகுல் காந்தியின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி: காங்கிரஸ் கருத்து
x

Image Courtacy: PTI

ராகுல் காந்தியின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

லே,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் தொடங்கி கடந்த ஜனவரி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ.க்கு நடைபயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கடந்த 17-ந்தேதி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதிக்கு சென்றார். பின்னர் பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் பகுதிகளுக்கு செல்வதற்காக மேலும் 4 நாட்களுக்கு தனது பயணத்தை நீட்டித்தார்.

கடந்த 19-ந் தேதி லேயில் இருந்து பாங்காங் ஏரி வரை 130 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். பின்னர் மீண்டும் லே பகுதிக்கு திரும்பிய ராகுல் காந்தி வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி

இந்த நிலையில் ராகுல் காந்தியின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' (டுவிட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 24-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, ஜம்முவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லியில் ராகுல் காந்தி லடாக்கிலிருந்து ஒரு பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார்.

அப்போது, சீனாவுடனான எல்லை சவால்கள் மற்றும் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்த மக்களின் கருத்துகளை அவர் வந்து கேட்க வேண்டும் என்று அந்த பிரதிநிதிகள் குழு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று லடாக் வருவேன் என ராகுல் காந்தி உறுதி மொழி அளித்தார். அவர் தற்போது லடாக் சென்றிருப்பது, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே.

பல வழிகளில், இந்த லடாக் யாத்திரை இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

எந்த சக்தியாலும் அடக்க முடியாது

இதனிடையே தனது லடாக் பயணம் குறித்து ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ஒற்றுமை யாத்திரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் மனதிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

லே நகரின் தெருக்களில் ஒலிக்கும் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷம் இந்த ஒற்றுமைக்கு ஒரு வலுவான உதாரணமாக விளங்குகிறது. பாசமும் தோழமையும் நிறைந்த இந்த குரலை எந்த சக்தியாலும் அடக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story