அரசு பள்ளியில் 1-8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால் வழங்கப்படும்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு


அரசு பள்ளியில் 1-8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால் வழங்கப்படும்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு
x

கோப்புப்படம் 

ராஜஸ்தானில் அரசுபள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த முயற்சியின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று அரசு நம்புவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி) பவன்குமார் கோயல் தெரிவித்தார். இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும்.

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 200 மில்லியும் வழங்கப்படும் என்றும், ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து பால் பவுடர் கொள்முதல் செய்யப்படும் என்றும் கோயல் தெரிவித்தார்.


Next Story