இடஒதுக்கீடு சட்டம் 'நியாயமாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை' - சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வாதம்


இடஒதுக்கீடு சட்டம் நியாயமாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வாதம்
x

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் நியாயமாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வாதிட்டது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான 3-வது நாள் விசாரணை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் முன்வைத்த முக்கிய வாதம் வருமாறு:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது சட்ட திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறியதாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை. சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் ஜனாதிபதியே கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் நலிவுற்ற நிலையிலும், எளிதில் சுரண்டலுக்கு ஆளாகும் நிலையிலும் உள்ளனர்.

இதனால்தான் அரசியலமைப்பு சாசனம் 46-வது பிரிவு நலிவுற்ற நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்வி, பொருளாதார நலன்களை சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும், சமூக அநீதி, அனைத்து வகையான சுரண்டல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறுகிறது.

சமத்துவத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் பாதிக்கிறது என்று அவர் கூறினார்.


Next Story