இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் மந்திராலயத்தில் சாமி தரிசனம்


இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் மந்திராலயத்தில் சாமி தரிசனம்
x

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் மந்திராலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

ராய்ச்சூர்:

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்தியவம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இவர் பெங்களூருவில் இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி- சுதாமூர்த்தி தம்பதியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ரிஷி சுனக் தனது மனைவி, தாய் உஷா சுனக், தந்தை யஷ்வீர் சுனக்குடன் இந்தியா வந்தார்.


இதில் ரிஷி சுனக்கின் தாய் கடந்த 10-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனது சம்பந்தி சுதா மூர்த்தி வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. உதய் கருடாச்சார் வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உஷா சுனக் கலந்துகொண்டார். இந்த நிலையில் உஷா சுனக்கும், அவரது கணவர் யஷ்வீர் சுனக்கும் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் எல்லையில் உள்ள மந்திராலயம் ராகவேந்திரா சாமி மடத்திற்கு நேற்று சென்றனர்.


அவருடன் சுதா மூர்த்தியும் சென்றிருந்தார். அங்கு அவர்கள் ராகவேந்திரா சாமியை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அவர்களுக்கு மடத்தின் நிர்வாகிகள் வஸ்திரம், பழங்கள், நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக இருவரையும் மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்த ஸ்ரீபாதம் கலை சுவாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.


Next Story