குஜராத் கலவரம்; தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி வேதனையடைந்தார் - அமித் ஷா


குஜராத் கலவரம்; தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி வேதனையடைந்தார் - அமித் ஷா
x

Image Courtesy: PTI

குஜராத் கலவரம்; தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி அடைந்த வேதனையை நான் பார்த்தேன் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு தீர்ப்புக்கு பின் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது;-

2022 குஜராத் கலவரத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி மிகுந்த வேதனையடைந்ததை நான் பார்த்தேன்.

பிரதமர் மோடி பெரிய தலைவர் ஆனால் அவர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தற்போது உண்மை வெளிவந்துள்ளது. பிரதமர் மோடி எவ்வாறு வலியை தாங்கிக்கொண்டார் என்பதை நான் பார்த்துள்ளேன்.

வலிமையாக உள்ள ஒருவர் அதிக வலியை தாங்கிக்கொள்ளார். நீதித்துறை விசாரணைகள் நடைபெற்றபோது அவர் எதுவும் செய்யவில்லை.

இந்த விவகாரத்தை சிலர் கொதிப்புடன் வைத்திருந்தனர். வழக்கு பாஜகவின் பெயரை சரித்தது. ஆனால், அது தற்போது நீங்கப்பட்டுவிட்டது.

கலவரம் நடந்தபோது நடவடிக்கை எடுக்க குஜராத் அரசு காலம் தாழ்த்தவில்லை. ஆனால், டெல்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், யாரும் கைதுசெய்யப்படவில்லை. எங்களை பாரபட்சத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர்' என்றார்

வழக்கு தொடர்பான விவரம்:-

குஜராத் இனக்கலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர் குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ரெயில் எரிப்பும், கலவரங்களும்

அயோத்தியில் கரசேவையில் பங்கேற்று விட்டு, கரசேவகர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது, 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி, குஜராத்தில் கோத்ராவில், அவர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து குஜராத்தில் பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. இந்த கலவரங்களில் 1,044 பேர் கொல்லப்பட்டனர்.

சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை

இந்த கலவரத்தை அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தூண்டினார், அவர் கலவரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, இந்த கலவரங்களை நடத்தியதில் உயர்மட்ட சதி நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி நரேந்திரமோடி உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று கடந்த 2012-ம் ஆண்டு இறுதி அறிக்கை அளித்தது.

இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா, நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கை, சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக ஜாக்கியா, குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு, ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து ஜாக்கியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இதன் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு தள்ளுபடி

இந்த நிலையில், ஜாக்கியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேர் குற்றமற்றவர்கள் என கூறி, ஜாக்கியாவின் மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

452 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

* இந்த வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரங்களை ஏற்படுத்துவதில் குற்றச்சதி நடைபெற்றது என்பதற்கு வலுவான அல்லது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

* ஜாக்கியாவின் வழக்கு, தகுதியற்றது.

* சவாலான சூழ்நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழுவின் பணி சிறப்பானது.

* வழக்கின் விசாரணையில் சட்ட விதி மீறல் என்றும், விசாரணை அறிக்கையை கையாண்டதில் மாஜிஸ்திரேட்டு மற்றும் ஐகோர்ட்டு அணுகுமுறை பற்றியும், மேல்முறையீட்டாளர் வைத்த வாதத்தை இந்த கோர்ட்டு ஏற்கவில்லை.

* சிறப்பு விசாரணைக்குழு, விசாரணையின்போது தன்முன் வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்துத்தான் முடிவுக்கு வந்துள்ளது. எனவே உயர் மட்டத்தில் சதி நடந்ததற்கான புதிய ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்கிறபோதுதான், மேல் விசாரணை பற்றிய கேள்வி எழும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story