குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதே நீதி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதே நீதி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x

கோப்புப்படம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பதே உண்மையான நீதி என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று போக்சோ வழக்கு விசாரணையில் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் அமர்வு விசாரித்தது. அப்போது போக்சோ சட்டத்தின் வழிமுறைகளில் ஒன்றான 'உதவும் நபர்' நியமனம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை நீதிபதிகள் வழங்கினர். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

நிவாரணம் கிடைப்பதில்லை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், தொடக்கத்தில் ஏற்படும் திகில் மற்றும் அதிர்ச்சியுடன், அது ஆழமான வடுவையும் ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு மற்றும் உதவிகள் இல்லாததால் நிலைமை மோசமாகிறது. இது போன்ற நிகழ்வுகளில், குற்றவாளியைப் பிடித்து அவரை நீதிக்கு முன் கொண்டு வருவதன் மூலமோ அல்லது தண்டனையின் தீவிரத்தினால் மட்டுமோ நிவாரணம் கிடைப்பதில்லை.

மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு (குழந்தை) அல்லது பாதிக்கப்படக்கூடிய சாட்சிக்கு ஆதரவு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவை வழங்குவதே உண்மையான நீதியாகும். மேலும் முழுமையான விசாரணையும், விசாரணையின் போது முடிந்தவரை வலியற்ற, குறைவான சோதனை அனுபவத்தை உறுதி செய்வதிலும் அரசும், அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்று சொற்றொடர்

வழக்கு விசாரணை காலத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திற்கு திரும்பக்கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக உணரச்செய்து, அவர்களின் மதிப்பும், கண்ணியமும் மீட்டெடுக்கப்படும்போதுதான் ஓரளவேனும் நீதி கிடைக்கும்.

இவை இல்லாத நீதி என்பது ஒரு வெற்று சொற்றொடர் மற்றும் ஒரு மாயைதான். இது தொடர்பாக போக்சோ சட்ட விதிகள் ஒரு பயனுள்ள கட்டமைப்பை வழங்குகிறது. இதை அமல்படுத்துவது மாநில அரசின் மிகப்பெரிய கடமையாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்

பின்னர் இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் 6 வாரங்களுக்குள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உதவும் நபர் நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை உருவாக்குவது தொடர்பாக அக்டோபர் 4-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அறிவுறுத்தினர்.


Next Story