கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் மனு : தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்டு


கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் மனு : தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்டு
x

சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 1-ந் தேதி பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, ரிட் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ள தீர்ப்பில், 'பாரதீய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.


Next Story