பயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவை இல்லை


பயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவை இல்லை
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீக்காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய தேவை இல்லை என்று விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீக்காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய தேவை இல்லை என்று விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்.

குக்கர் குண்டு வெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதியான ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த ஷாரிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அவர் சிகிச்சை பெறும் வார்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குண்டுவெடிப்பில் ஷாரிக்கின் 2 கைகளிலும், வயிற்று பகுதியிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயங்கள் துறை தலைவர் டாக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை தேவை இல்லை

ஷாரிக்கின் தீக்காயங்கள் நன்றாக குணம் அடைந்து வருகிறது. நாங்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து அவருக்கு தேவைப்படும் சிகிச்சையை அறிந்தோம். தற்போது அவருக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகிறதோ அதை அளித்து வருகிறோம்.

எங்களது சிகிச்சைக்கு ஷாரிக் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் அவர் தீக்காய வார்டில் சிகிச்சையில் இருக்க வாய்ப்பு உள்ளது. தீக்காயங்கள் குணம் அடைந்து வருவதால் ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story