வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்


வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2024 10:21 AM GMT (Updated: 1 Feb 2024 11:23 AM GMT)

பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதன்படி பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை நிதி மந்திரி அறிவித்தார். இதில், நடுத்தர வர்க்கத்தினருக்கென தனி வீட்டுமனை திட்டம் தொடங்கி வைப்பது குறித்தும், நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து, வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டுதோறும் மின்சாரத்திற்காக செலவிடும் பெரும் தொகையை மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு மொட்டை மாடியில் சோலார் அமைப்பை நிறுவுவதன் மூலம், ஒரு கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை என்ற வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமரின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலவச சோலார் மின்சாரம் மற்றும் உபரி மின்சாரத்தை விநியோக நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையில் இடம்பெற்ற மேலும் சில அறிவிப்புகள்:-

நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீடு அமைக்கும் இலக்கு 3 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

கூடுதல் மருத்துவமனைகள், கல்லூரிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கின்ற மருத்துவமனைகள், கல்லூரிகளை தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நகரின் பின் தங்கிய பகுதிகளிலும், முறைப்படுத்தப்படாத குடியிருப்பு பகுதிகளிலும் வசிக்கக் கூடியவர்கள், வீடு வாங்கவும், வீடு கட்டவும் வழிவகை செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


Next Story