நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? காங்கிரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம்


நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? காங்கிரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம்
x
தினத்தந்தி 4 Feb 2023 4:54 PM GMT (Updated: 4 Feb 2023 4:56 PM GMT)

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்வதாகக்கூறி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

'எந்தவொரு விவாதத்துக்கும் தயார்'

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை. இதையொட்டி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறி உள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக்கூடாது?

எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

'இடையூறு செய்கிறார்கள்'

அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால், ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல், அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர் மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பதில்

இதற்கு காங்கிரஸ் சார்பில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவருக்கு சபைகளின் சட்ட விதிகள் தெரியவில்லை. அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி. பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை செய்துள்ள முதலீடுகளால், நாட்டின் சாமானிய மக்களின் பணம் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன" என தெரிவித்தார்.


Next Story