ஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்


ஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Jan 2024 11:10 PM GMT (Updated: 21 Jan 2024 2:18 PM GMT)

பெண் பயணி ஒருவர் 763.36 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டெல் சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஆமதாபாத் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அபுதாபியில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் 763.36 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு 49 லட்சத்து 7 ஆயிரத்து 641 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story