பெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை


பெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 26 Nov 2023 12:17 AM GMT (Updated: 26 Nov 2023 5:45 AM GMT)

5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சவும்யா விஸ்வநாதன், டெல்லியில் ஒரு பிரபல ஆங்கில செய்தி சேனலில் நிருபராக வேலை பார்த்துவந்தார். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி அதிகாலை, வேலை முடிந்து காரில் சவும்யா வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

தெற்கு டெல்லியின் நெல்சன் மண்டேலா சாலையில் அவரது கார் வந்தபோது வழிப்பறி செய்வதற்காக சிலர் துரத்தினர். சவும்யா காரை வேகமாக ஓட்டிச்செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டனர். அதில் சவும்யா பரிதாபமாக பலியானார்.

இந்த படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார், அஜய் சேத்தி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டு, 5 பேரும் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். அதன்படி, ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார். 5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை மொத்தம் ரூ.12 லட்சத்தை சவும்யாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது அரிதிலும் அரிதான வழக்கு என்ற பிரிவின் கீழ் வராது என்பதால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.


Next Story