சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் போலீஸ்காரர் உள்பட மேலும் 8 பேர் கைது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் போலீஸ்காரர் உள்பட மேலும் 8 பேர் கைது
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் போலீஸ்காரர் உள்பட மேலும் ௮ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தோ்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று மேலும் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களின் பெயர்கள் பகவந்தராயா ஜோகுர், கல்லப்பா சித்தப்பா அல்லாபுரா, ரவிராஜ், பீரப்பா சித்னால், ஸ்ரீசைலா கச்சடா, சித்துகவுடா சரணப்பா பட்டீல், சோமநாத், விஜயகுமார் கூடூர் ஆகும். இவர்களில் பகவந்தராயா ஜோகுர் கர்நாடக-தெலுங்கானா பிரிவில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர் ஆவார். 4-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்ற கல்லப்பா சித்தாப்புரா அல்லாப்புரா ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.


சித்துகவுடா சரணப்பா பட்டீல் யாதகிரி மாவட்டம் முத்னாலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த முறைகேடு வழக்கில் கைதான காங்கிரஸ் பிரமுகர் ஆர்.டி.பாட்டீலின் மனைவியின் தம்பி தான் சித்துகவுடா என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 8 பேரும் தேர்வில் புளூடூத் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. கைதான 8 பேரையும் கலபுரகி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story