தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு - ஐகோர்ட்டு உத்தரவு


தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு - ஐகோர்ட்டு உத்தரவு
x

ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத்தேர்வு நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத 2018-ல் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் ஐகோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளதாகவும் கேந்திரிய வித்யாலயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது மாணவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


Next Story