லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை


லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
x

கோப்புப்படம்

‘கோச்சடையான்' திரைப்பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாகவும், அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை கோர்ட்டில் அபிர்சந்த் நஹார் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீசார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன‌. அதேநேரத்தில் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 பிரிவு குறித்து கீழ்கோர்ட்டு விசாரணை நடத்தலாம்' என கடந்த ஆகஸ்டு 2-ந் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் சார்பில் மூத்த வக்கீல் சத்யநாராயணா ஆஜராகி, மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.


Next Story