கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கக்கேட்டு பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவில் எதிர்மனுதாரர்கள் யார்? யார்? என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தேர்தல் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உள்ளதாக மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் பதிலளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடுமையான குற்றங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்ககோரி தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story