பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரையில் அதிகம் இடம்பெற்ற தமிழ்நாடு


பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் அதிகம் இடம்பெற்ற தமிழ்நாடு
x

பிரதமர் மோடியின் ‘‘மன் கி பாத்” உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, "மனதின் குரல்" (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதுவரை 99 உரைகள் முடிந்துள்ளன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 100-வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது.

இதுவரை ஒலிபரப்பப்பட்ட உரைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் இதுவரையிலான உரையில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு, தமிழ் கலாசாரம், தமிழர்களின் தனித்திறன்கள் போன்றவை அதிகம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.

இதில் முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்து உள்ளனர். "உலகின் பழமையான மொழி தங்களது நாட்டைச்சேர்ந்தது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும்", "அழகான, உலக புகழ்பெற்ற மொழியை கற்கவில்லை என்பதில் வருத்தம் கொள்கிறேன்" மற்றும் திருக்குறளின் சிறப்பம்சங்கள். அவ்வையார் பாட்டு என்பன போன்ற தமிழ்மொழியை போற்றும் பல வாசகங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

வில்லுப்பாட்டு

இந்திய ஜனநாயக மரபை உத்திரமேரூர் கல்வெட்டு அப்போதே எடுத்து இயம்பியதை சுட்டிக்காட்டி உள்ளார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமப்புற கலைகளை எடுத்துரைத்து உள்ளார்.

வேலூரில் நாகை நதியை மீட்டெடுக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றுபட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயலை தடுத்து, மண்ணைக் காக்க பனைமரங்கள் நடுவது போன்ற பெண்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார். தமிழக விவசாயிகளை பலமுறை புகழ்ந்துள்ளார். 'சுகன்யா சம்ரித்தி' திட்டத்தின் கீழ் 175 குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பெண்களுக்காக சுமார் 60 ஆயிரம் கணக்குகளைத்தொடங்கவும் முயற்சித்த கடலூர் மக்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

தஞ்சாவூர் பொம்மை

சென்னையைச்சேர்ந்த சுசித்ரா ராகவாச்சாரியின் வேண்டுகோளை ஏற்று, குடிமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் கே.சி.மோகன் தனது மகளின் கல்விக்காக சேமித்த ரூ.5 லட்சத்தை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சேவைக்காக கொரோனா காலத்தில் செலவு செய்ததை குறிப்பிட்டு உள்ளார். பீடித் தொழிலாளி யோகநாதனின் மகள் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் பெற்றதை பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதற்கு விவசாயிகளை பாராட்டியுள்ளார். தமிழகத்தின் வாழைப்பழங்கள், தஞ்சாவூர் பொம்மை போன்றவற்றை புகழ்ந்துள்ளார்.

இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ்நாட்டின் சிறப்புகளை பிரதமர் மோடி வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story