தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை


தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Dec 2023 10:15 PM GMT (Updated: 24 Dec 2023 7:38 AM GMT)

நிலம் தொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் ஜனவரி 5ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது, ரெயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் இடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக டிச.22-ந்தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ந் தேதி அவரது தந்தை லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், தேஜஸ்வி யாதவ் 22-ந்தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story