தெலுங்கானா: பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கிவைத்தார் ரேவந்த் ரெட்டி


தெலுங்கானா: பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கிவைத்தார் ரேவந்த் ரெட்டி
x
தினத்தந்தி 9 Dec 2023 12:23 PM GMT (Updated: 9 Dec 2023 4:26 PM GMT)

தெலுங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் இன்று மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்தது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், சோனியா காந்தி பிறந்தநாளான இன்று, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பேருந்து திட்டத்தை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம்.

தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள். இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள், தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story