'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்தியா என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 Sep 2023 7:32 AM GMT (Updated: 1 Sep 2023 8:17 AM GMT)

'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மும்பை,

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் மும்பையில் 2-வது நாளாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. எதிர்க்கட்சி கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுவதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நமது நாட்டை பாஜக ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. சீரழிவை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

'இந்தியா' கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையால் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை 'இந்தியா' கூட்டணியில் சேர்த்தாக வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் நோக்கம். ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


Next Story