குடிபோதையில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் விடுத்தேன்: வாலிபர் வாக்குமூலம்


குடிபோதையில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் விடுத்தேன்:  வாலிபர் வாக்குமூலம்
x

நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு குடிபோதையில் மிரட்டல் விடுத்தேன் என போலீசாரிடம் பிடிபட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

புனே,

மராட்டியத்தில் சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்து வருபவர் சஞ்சய் ராவத். இந்நிலையில், அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தரப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது என கூறப்பட்டது.

இதுபற்றி சஞ்சய் ராவத் எம்.பி. போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் பற்றி வெளியான செய்தியில், டெல்லியில் என்னை வந்து சந்தித்து பார். ஏ.கே.-47 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவாய்.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார் என அந்த மிரட்டல் செய்தி தெரிவித்தது.

சஞ்சய் ராவத் எம்.பி. கூறும்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர், எங்களுடைய தலைவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது.

இதுபற்றி ஒருபோதும் நான் கடிதம் எழுதவில்லை. ஆனால், முதல்-மந்திரியின் மகன் எங்களை கொல்ல குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் சதி திட்டம் தீட்டி வருகிறார். இதுபற்றி உள்துறை அமைச்சகத்துக்கு நாங்கள் தகவல் அனுப்பினால், அவர்கள் இதனை நாடகம் என கூறுகின்றனர் என்று ராவத் கூறினார்.

தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறும்போது, எனக்கு மிரட்டல் செய்தி வந்தது. அதுபற்றி போலீசிடம் தெரிவித்தேன். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். இதுபோன்று என் மீது தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளும் நடந்தன. போலீசார் என்ன செய்தனர். மராட்டிய உள்துறை மந்திரி என்ன செய்து விட்டார்? என ராவத் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய ஒரு நபரை புனே போலீசார் பிடித்து விசாரணை செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில், அவரது பெயர் ராகுல் தலேக்கர் (வயது 23) என தெரிய வந்தது. அவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்து உள்ளது.

அந்த நபர் குடிபோதையில் அந்த மிரட்டல் செய்தியை விடுத்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.


Next Story