2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்திய தமிழக தம்பதி கைது


2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்திய தமிழக தம்பதி கைது
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

பெங்களூரு அருகே விவசாயியை தாக்கி 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்திய தமிழக தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அந்த தக்காளிகளை சென்னையில் விற்றதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே விவசாயியை தாக்கி 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்திய தமிழக தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அந்த தக்காளிகளை சென்னையில் விற்றதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

2 டன் தக்காளி

கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனை தடுக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கண்காணிப்பு கேமரா, இரவு நேர பாதுகாப்பு பணி போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8-ந் தேதி சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவர் தான் விளைவித்த 2 டன் தக்காளியை கோலார் மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தார். சரக்கு வாகனம் ஒன்றில் அவர் தக்காளிகளை எடுத்து வந்தார். அவரும், சரக்கு வாகன டிரைவரும் பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வாகனத்தை டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

அப்போது அவர்களை காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர்கள், விவசாயி மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினர். அதையடுத்து 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். அப்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர்(வயது 38) மற்றும் சிந்துஜா(36) தம்பதி என்பது தெரிந்தது. அவர்கள் தங்கள் கூட்டாளிகள் உதவியுடன் சம்பவத்தன்று தக்காளி பாரத்துடன் வந்த சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அதை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.

பணத்தை பங்கு போட்டனர்

அதன்படி அவர்கள் சென்னைக்கு சென்று, அங்கு 2 டன் தக்காளியையும் விற்று ரூ.1½ லட்சம் சம்பாதித்து உள்ளனர். மேலும் அந்த பணத்தை தம்பதி உள்பட 5 பேரும் பங்குபோட்டு கொண்டு மீண்டும் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அங்கு நிறுத்தி இருந்த காலி சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story