மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை பெயிண்டர் மீது போலீசில் புகார்


மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை  பெயிண்டர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:46 PM GMT)

தார்வாரில், கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெயிண்டர் ஒருவர் சித்ரவதை செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

உப்பள்ளி-

தார்வாரில், கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெயிண்டர் ஒருவர் சித்ரவதை செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கள்ளத்தொடர்பு

தார்வார் (மாவட்டம்) தாலுகா கல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி அந்தப்பன்னவர்(வயது 25). இவருக்கும், ராகவேந்திரா அந்தப்பன்னவர்(32) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் பெயிண்டரான ராகவேந்திராவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

வரதட்சணை கொடுமை

இதுபற்றி லட்சுமிக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தார். ஆனால் ராகவேந்திரா அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர் லட்சுமியை கொடுமைப்படுத்தினார். அதாவது ரூ.5 லட்சத்தை கூடுதல் வரதட்சணையாக அவரது பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி கூறி லட்சுமிக்கு ராகவேந்திரா தொல்லை கொடுத்தார். மேலும் அடித்து, உதைத்து சித்ரவதையும் செய்தார்.

நேற்று முன்தினம் இரவும் ராகவேந்திரா, தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு செய்தார். இதையடுத்து லட்சுமி நேற்று தார்வார் புறநகர் போலீசில் தனது கணவன் ராகவேந்திரா மீது வரதட்சணை புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அந்த புகாரில் தனது கணவர் ராகவேந்திரா, விதவை பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடித்து, உதைத்து சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story