கள்ளக்காதலால் விபரீதம்.. பெண்ணை எரித்துக்கொன்று, குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற நபர் கைது


கள்ளக்காதலால் விபரீதம்.. பெண்ணை எரித்துக்கொன்று, குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற நபர் கைது
x
தினத்தந்தி 14 April 2024 2:37 AM GMT (Updated: 14 April 2024 10:55 AM GMT)

சாலையோரம் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் தொட்டகுனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் எரிந்த நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சேலூர் கிராமத்தை சேர்ந்த ருக்சனா என்பது தெரியவந்தது. மேலும் அவரை மர்மநபர்கள் கொன்று உடலை எரித்தது தெரியவந்தது.

இந்த நிலையில் ருக்சனா கொலை வழக்கில் அதேப்பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் ருக்சனாவை கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் ஏற்கனவே திருமணமான நிலையில், அவர்கள் பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ருக்சனா கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து பிரதீப், ருக்சனாவை விட்டு விலகி சென்றார். இதற்கிடையே கடந்த 1½ மாதத்திற்கு முன்பு ருக்சனாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பிரதீப் தான் தந்தை என ருக்சனா கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப், கடந்த சில தினங்களுக்கு முன்பு ருக்சனாவுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ருக்சனாவை அடித்து கொலை செய்துவிட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மேலும் குழந்தையையும் சாலையோரம் வீசி சென்றுள்ளார். அந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story