உக்ரைனில் படிப்பை பாதியில் விட்ட மருத்துவ மாணவர்களுக்கு சலுகை: இந்தியாவில் தகுதித்தேர்வு எழுத அனுமதி


உக்ரைனில் படிப்பை பாதியில் விட்ட மருத்துவ மாணவர்களுக்கு சலுகை: இந்தியாவில் தகுதித்தேர்வு எழுத அனுமதி
x

போரினால் உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கு தகுதித் தேர்வினை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று உக்ரைன் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படித்து வந்தனர். அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை உருவானது.

அதைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் அங்கு தங்கள் மருத்துவ படிப்பைத் தொடர முடியாத சூழல் உருவானது. அந்த மாணவர்களை இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப அழைத்து வருவதே பெரும் சவாலானது. ஒரு வழியாக நாடு திரும்பிவிட்ட அந்த மாணவர்கள், தங்கள் மருத்துவப் படிப்பை தொடர முடியாத சூழல் உருவானதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்தியாவில் ஒரு வாய்ப்பு

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு தரப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

உக்ரைன் அனுமதி

இந்த நிலையில், உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் தபரோவா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். அவர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மாவை நேற்று முன்தினம் சந்தித்துப்பேசினார்.

இந்த சந்திப்பின்போது, உக்ரைனில் மருத்துவ படிப்பைத் தொடர முடியாமல் போன இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் நாட்டில் ஒருங்கிணைந்த தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.

இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகையால், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்களும் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story