மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஆளில்லாத வீடுகளுக்கு தீவைப்பு


மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஆளில்லாத வீடுகளுக்கு தீவைப்பு
x

கோப்புப்படம்

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஆளில்லாத வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை சம்பவம் நடந்தது.

தலைநகர் இம்பாலில் நியூ லம்புலேன் பகுதியில், யாரும் குடியிருக்காத 3 வீடுகளுக்கு அடையாளம் தெரியாத கும்பல் தீவைத்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். மத்திய, மாநில பாதுகாப்பு படைகளை அங்கு குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே, இம்பால் மேற்கு மாவட்டம் சகோல்பாண்ட் என்ற இடத்தில் சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி கே.ரஜோவின் வீட்டுக்கு காவலுக்கு இருந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒரு கும்பல், 3 ஆயுதங்களை பறித்துச் சென்றது. அந்த ஆயுதங்களில், ஏ.கே. ரக துப்பாக்கிகளும், ஒரு நீளமான துப்பாக்கியும் அடங்கும்.


Next Story