ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை - உ.பி. அரசு அதிரடி


ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை - உ.பி. அரசு அதிரடி
x
தினத்தந்தி 18 Nov 2023 10:03 PM GMT (Updated: 19 Nov 2023 6:22 AM GMT)

போலியான ஹலால் முத்திரையிட்டு அளித்து மக்களின் மத உணர்வுகளை தூண்டி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சித்ததாக புகார்கள் எழுந்தன.

லக்னோ,

இஸ்லாமிய மத்தில் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி இல்லாததை ஹராம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி, உணவு வகைகள், மருந்துப்பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்கள் ஹலால் முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை செய்ய உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது.

உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க அரசின் உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டம் உள்ள நிலையில் ஹலால் முத்திரை வழங்கும் நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து சான்று வழங்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

போலியான ஹலால் முத்திரையிட்டு அளித்து மக்களின் மத உணர்வுகளை தூண்டி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சித்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஹலால் முத்திரையிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய உ.பி. அரசு அனுமதி வழங்கியுள்ளது.


Next Story