கேரளாவில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் மரணம்.. 3 மாதங்களில் பறிபோன 5-வது உயிர்


கேரளாவில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் மரணம்.. 3 மாதங்களில் பறிபோன 5-வது உயிர்
x

வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுப்பது அரசுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

பத்தனம்திட்டா:

கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பெருமளவில் சேதங்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர்.

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் துலாப்பள்ளியில் உள்ள வனப்பகுதி அருகே பிஜு (வயது 53) என்பவர் காட்டு யானை தாக்கி இன்று உயிரிழந்தார். யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து யானையை விரட்டியபோது, யானை அவரை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்து கொன்றுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுப்பது அரசுக்கு சவாலாகவே இருக்கிறது. வன விலங்குகள் வராமல் தடுப்பதற்காக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்ய கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காட்டு யானை தாக்கி பிஜு இறந்ததையடுத்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மனித-விலங்கு மோதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பிஜுவின் குடும்பத்தினரை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு விரைவில் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.


Next Story