நாய் சங்கிலியால் கணவரை கட்டிப்போட்ட பெண்


நாய் சங்கிலியால் கணவரை கட்டிப்போட்ட பெண்
x

குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த கணவரை நாய் சங்கிலியால் பெண் ஒருவர் கட்டிப்போட்டார்.

சித்ரதுர்கா:

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தா. இவரது கணவர் ரங்கநாத். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா நேரத்தில் வேலை இழந்த ரங்கநாத் மனைவியுடன் சேர்ந்து, இரியூரில் உள்ள ஹர்த்திகோட்டில் வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான அவர், அடிக்கடி மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது தொல்லை தாங்க முடியாத மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ரங்கநாத் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவியை அழைத்து வருவதற்காக ஒசூர் கிராமத்திற்கு ரங்கநாத் குடிபோதையில் சென்றார். அங்கு வீட்டின் முன்பு நின்று மனைவியை அழைத்துள்ளார். இதை பார்த்து அமிர்தாவின் தந்தை உமேஷ் வெளியே வந்துள்ளார். அவரிடம் ரங்கநாத் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமிர்தா, வீட்டில் இருந்த நாய் சங்கிலியை எடுத்து வந்து ரங்கநாத்தின் கை, கால்களை கட்டி உள்ளார். அப்போது ரங்கநாத் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதை கண்ட அந்த பகுதியினர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story