டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த பெண்- விசாரணை தீவிரம்


டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த பெண்- விசாரணை தீவிரம்
x

பெண்ணின் உடல் சிதைந்திருந்ததால் வெளிப்புற காயம் எதுவும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

தெற்கு டெல்லியின் கிர்கி விரிவாக்கப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மால்வியா நகர் காவல் நிலையத்திற்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், கிர்கி விரிவாக்கப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர்.

அப்போது, அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டனர். அதன்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் பெயர் சானியா ராய் என்றும், அவரின் உடல் சிதைந்திருந்ததால் வெளிப்புற காயம் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story