மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி விழுந்து பெண், சிறுமி பலி


மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி விழுந்து பெண், சிறுமி பலி
x

கட்டுமான பணிகள் நடந்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி பெண், சிறுமி பலியானார்கள்.

இரும்பு கம்பி

மும்பை ஜோகேஸ்வரி மேற்கு விரைவு சாலையில் சால்யக் ஆஸ்பத்திரி அருகே 14 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக நேற்று மாலை 5.45 மணியளவில் ஒரு ஆட்டோ சென்றது. அப்போது கட்டுமான பணி நடந்து வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி ஒன்று ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் மற்றும் சிறுமியின் தலையில் இரும்பு கம்பி பயங்கரமாக தாக்கியது.

இருவரும் பலி

அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெண் உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானாள். தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பலியான பெண் அந்த பகுதியில் உள்ள பிரதாப் நகரை சேர்ந்த ஷமா ஆஷிப் சேக் (வயது 28) மற்றும் சிறுமி அயத் ஆஷிப் சேக் (9) என தெரியவந்தது. இவர்கள் தாய், மகள் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் வலியுறுத்தல்

சம்பவத்துக்கு காரணமானவர்கள், கட்டுமான நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கட்டுமான பணிகள் நடந்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி தாய், மகள் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story