கள்ளக்காதலை கண்டித்த கணவன் படுகொலை: திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவி கைது


கள்ளக்காதலை கண்டித்த கணவன் படுகொலை: திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவி கைது
x

உத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் கணவனை தீர்த்துக்கட்டியதாக அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாரணாசி:

உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம் ஜூகைல் பகுதியைச் சேர்ந்த பிரேம் மோகன் கர்வார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த 12ம் தேதி ஊரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. கொல்லப்பட்ட பிரேமின் மனைவி பிந்துவுக்கும், ஷம்சாத் என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதை பிரேம் கண்டித்ததும் தெரியவந்தது..

பிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமை திருமணம் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷம்சாத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளத்தொடர்புக்கு பிரேம் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிரேமை கொலை செய்ய பயன்படுத்திய கோடரியை ஒரு கிணற்றில் இருந்து எடுத்தனர். பிந்து மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.


Next Story