கத்தியால் குத்தி பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு


கத்தியால் குத்தி பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு
x

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் கத்தியால் குத்தி பெண்ணை கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

வரதட்சணை கொடுமை

பெங்களூரு புறநகர் நெலமங்களா தாலுகா புசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 24). இவருக்கும் தரபனஹள்ளியை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணமான நாள் முதலே கூடுதல் வரதட்சணை கேட்டு கிருஷ்ண மூர்த்தி, ஸ்ருதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதன்காரணமாக ஸ்ருதி மனமுடைந்து காணப்பட்டார்.

பெண் கொலை

நேற்றும் கிருஷ்ண மூர்த்தி வரதட்சணை கேட்டு ஸ்ருதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஸ்ருதி, வரதட்சணை வாங்கி வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண மூர்த்தி, ஸ்ருதியை தாக்கி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஸ்ருதியை குத்தி உள்ளார். இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு கிருஷ்ண மூர்த்தி தப்பியோடி தலைமறைவானார்.

இதற்கிடையே ஸ்ருதியை செல்போனில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டனர். செல்போனை எடுக்காததால், பெற்றோர் வீட்டிற்கே வந்தனர். அப்போது கதவு பூட்டி கிடந்ததால் உடனடியாக நெலமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஸ்ருதி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story