பிரேத பரிசோதனைக்கு வந்த பெண்ணின் சடலத்தில் கண்கள் அகற்றம்.. உடல் உறுப்புகள் திருட்டா?


பிரேத பரிசோதனைக்கு வந்த பெண்ணின் சடலத்தில் கண்கள் அகற்றம்.. உடல் உறுப்புகள் திருட்டா?
x

இரண்டாவது பிரேத பரிசோதனையை வீடியோ எடுத்து அறிக்கையுடன் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள ரசூலா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா(வயது 20). நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் பூஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பூஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு இவரை கொலை செய்திருக்கலாம் எனவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதனால் அந்த பெண்ணின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக புடானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, உடலில் இருந்து கண்கள் அகற்றப்பட்டிருப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அப்போது உடல் உறுப்பு கடத்தலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் மனோஜ் குமார் கூறியதாவது,

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் என்னை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும். யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இரண்டாவது பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுத்து அறிக்கையுடன் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் வர்ஷ்னி தெரிவித்தார்.


Next Story