உ.பி.யில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு - செயல்திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு


உ.பி.யில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு - செயல்திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
x

10 முக்கிய துறைகளுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 35 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், 2023-24ம் நிதியாண்டிற்கு 6.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 2027-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில பா.ஜ.க. அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்த 4 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர்(ரூ.82 லட்சம் கோடி) மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றுவதற்கு 10 முக்கிய துறைகளுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி விவசாய உற்பத்தி, சட்டம் மற்றும் ஒழுங்கு, சமூக பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலை வளர்ச்சி, கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி, வருவாய், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகிய 10 துறைகளில் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story