மதுபான கொள்கை முறைகேடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மகன் அதிரடி கைது


மதுபான கொள்கை முறைகேடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மகன் அதிரடி கைது
x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானாவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, மதுபான கொள்கையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக தனியாருக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கி சலுகைகளை கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் பரிந்துரையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இதில் கலால்துறையை தன் வசம் வைத்துள்ள டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் அந்த கொள்கை முடிவுகள் செயல்படுத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டன.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பணமோசடியும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐயுடன் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்மந்திரியுமான மனீஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், எல்.எல்.ஏ.வுமான கவிதாவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் மனீஷ் சினோடியா, கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

அதேவேளை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை 9 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு கொரந்தலாவை சிபிஐ கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தெலுங்கானா ஆளும்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மகுந்தா ஸ்ரீனிவாசலூவின் மகன் மகுந்தா ராகவாவை அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மகுந்தா ராகவாவிடம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story