அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெற சக்தி திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர்


அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெற சக்தி திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெறுவதற்காக ‘சக்தி’ திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக பெண்களுக்கு கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் பெண்கள் எங்கிருந்து, எங்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கான கட்டண தொகையை, கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தாவரகெரே செல்லும் பி.எம்.டி.சி (அரசு) பஸ்சில் பணியாற்றிய

கண்டக்டர், பெண்களுககு கட்டணம் இல்லாத டிக்கெட்டுகளை கிழித்து ஜன்னல் வழியாக வீசியபடி இருந்தார். அதனை பயணி ஒருவர் செல்போன் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் கவனத்திற்கும் வந்தது. இதையடுத்து, அரசு பஸ் கண்டக்டர் கொட்டியாலாவை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிக பயணிகள் தனது பஸ்சில் பயணித்ததற்காக வழங்கப்படும் ஊக்க தொகையை பெறுவதற்காக சக்தி திட்டத்திற்கான இலவச டிக்கெட்டுகளை கிழித்து எறிந்ததாக கொட்டியாலா தெரிவித்தார். இதற்காக அவர் அதிகாரிகளிடம் மன்னிப்பும் கேட்டார்.

அதாவது ரூ.1,000-க்கு ெபண் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணித்திருந்தால், இதற்காக ரூ.35 கண்டக்டருக்கு ஊக்க தொகை கிடைக்கும். இந்த ஊக்க தொகைக்கு ஆசைப்பட்டு அதிக பெண்கள் பயணம் செய்தது போல் காட்டுவதற்காக அவர் சக்தி திட்டத்தில் பெண்களுக்கு வழங்கும் கட்டணமில்லா டிக்கெட்டுகளை கிழித்து எறிந்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்டக்டர் கொட்டியாலாவை பணியிடை நீக்கம் செய்து பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்யாவதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story