காங்கிரஸ் கட்சி; எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவிக்க தடை - டி.கே.சிவக்குமார்


காங்கிரஸ் கட்சி; எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவிக்க தடை - டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தடை விதித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தடை விதித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நான் கூறியது இல்லை

காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க நான் ஒருவனே காரணம் என்று எப்போதும் கூறியதில்லை. சதீஸ் ஜார்கிகோளி தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்களும், மாநில மக்களும் தான் காரணம் என்று பலமுறை கூறி இருக்கிறேன்.கட்சியின் தொண்டர்களே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களிடம் பேசி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.

2½ ஆண்டுகளுக்கு பின்பு மாநிலத்தில் மந்திரிசபை மாற்றியமைக்கப்படும் என்று அசோக் பட்டன் கூறி இருக்கிறார்.

பகிரங்கமாக கருத்து கூடாது

காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து கட்சியின் தலைமையுடன் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. என்ன ஆலோசனை நடந்தது என்பது பற்றி பகிரங்கமாக எதுவும் கூற முடியாது.

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளனர். காங்கிரசின் உள் விவகாரங்கள் குறித்து யாரும் பகிரங்கரமாக கருத்து தெரிவிக்க கூடாது. எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும், அதுபற்றி கட்சிக்குள் தான் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரசாமிக்கு பதிலடி

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறி இருப்பது குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், குமாரசாமிக்கு இந்த நாட்டின் சொத்து எது என்பது பற்றிய அறிவு இல்லை. நாட்டில் கோவில்கள், தேவாலயம், சினிமா தியேட்டர்கள் இருக்கிறது. குமாரசாமி தயாரிக்கும் படத்தில், அவரது மகன் நடிக்கிறார். இதற்கு பணம் தேவைப்படும் என்றார்.


Next Story