அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு
![அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/1573007-policeinvestigation.webp)
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
16 பேர் உயிரிழந்தனர்
பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள், புகைப்பட கலைஞர் என மொத்தம் 16 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் அவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு மட்டுமின்றி தமிழக அரசும் நிவாரண நிதி உதவி வழங்கியது.
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் ராமசாமி ரெட்டி, அனில்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் திடீரென நடைபெற்றதா? அல்லது அலட்சியத்தால் நடைபெற்றதா? என்பது குறித்து அறிய மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிக்கை தாக்கல்
இதன் விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமலான் ஆதித்யா பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.