கட்சிரோலியில் 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்; தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள்


கட்சிரோலியில் 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்; தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 2:00 AM GMT (Updated: 22 Sep 2022 2:00 AM GMT)

கட்சிரோலியில் தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.

நாக்பூர்,

கட்சிரோலியில் தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.

சரணடைந்த நக்சலைட்டுகள்

கட்சிரோலியில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், மனம் திருந்தி சரணடையும் நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

இதன்காரணமாக பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் 2 நக்சலைட்டுகள் கட்சிரோலி போலீசாரிடம் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் கட்ரோலியை சேர்ந்த அனில் என்கிற ராம்சே குஜூர்(வயது 26), சத்தீஷ்காரை சேர்ந்த ரோகினி பல்லோ(30) என்பது தெரியவந்தது.

இதில் ராம்சே குஜூர் தலைக்கு ரூ.4 லட்சமும், ரோகினி பல்லோ தலைக்கு ரூ. 2 லட்சமும் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள்.

வாக்குமூலம்

ராம்சே குஜூர் 2011-ம் ஆண்டு கோப்ராமந்தா மற்றும் கியாரப்பட்டி ஆகிய இடங்களில் நடந்த 2 சம்பவங்களிலும், அதே ஆண்டில் சோட்டா ஜெலியா காட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டிலும் தொடர்புடையவர் ஆவார்.

இதே போல ரோகினி பல்லோ நக்சலைட்டுகளின் துணை தளபதியாகவும், போராளி குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

அவர் பல்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்களிலும் தொடர்புடையவர் ஆவார்.

ராம்சே குஜூர் தனது வாக்குமூலத்தில், நக்சலைட்டுகள் ஏழை பழங்குடியின இளைஞர்களை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல ரோகினி பல்லோ, நக்சலைட்டு படையில் ஆண்கள், பெண்கள் பாரப்பட்சம் காட்டப்படுவதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

ரூ.5 லட்சம்

அதேநேரம் ராம்சே குஜூர், ரோகினி பல்லோவின் மறு வாழ்விற்காக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் போலீசார் கூறினர்.

2019-ம் ஆண்டு முதல் இதுவரை 51 நக்சலைட்டுகள் சரணடைந்து உள்ளனர்.


Next Story