காதலிக்கு வீடியோ காலில் பேசியப்படியே தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு- சாந்தாகுருஸ் அருகே சம்பவம்


காதலிக்கு வீடியோ காலில் பேசியப்படியே தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு- சாந்தாகுருஸ் அருகே சம்பவம்
x
தினத்தந்தி 6 Sep 2022 2:49 PM GMT (Updated: 7 Sep 2022 2:29 AM GMT)

சாந்தாகுருசில் கணபதி மண்டல் அருகே காதலிக்கு வீடியோ காலில் பேசியப்படியே தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் சாகர் ஜாதவ் (வயது19). இவர் நேற்று வீட்டின் அருகே போடப்பட்டு இருந்த கணபதி மண்டலுக்கு சென்றிருந்தார். பின்னர் தனது காதலிக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்து தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்தார். இதற்கு காதலி மறுத்ததாக தெரிகிறது.

இதனால் அவரிடம் வாக்குவாதம் செய்து கணபதி மண்டலுக்கு வராமல் போனால் தான் தீக்குளிக்க போவதாக மிரட்டினார். ஆனால் சாகர் ஜாதவ் நாடகம் ஆடுவதாக காதலி கருதி உள்ளார். திடீரென சாகர் ஜாதவ் தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்த போது அணிந்திருந்த காட்டன் சட்டையில் தீ பற்றி கொண்டது. இதனால் தீ மள மள வென பரவியதால் சத்தம் போட்டார். இந்த சம்பவத்தை காதலி வீடியோ அழைப்பில் நேரலையாக கண்டதால் அதிர்ச்சி அடைந்தார்

30 சதவீத தீக்காயம்

மேலும் இதுபற்றி அறிந்த சாகர் ஜாதவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு 30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வக்கோலா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தனது நடவடிக்கைக்கு யாரும் காரணம் இல்லை என வாலிபர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணபதி மண்டல் அருகே வாலிபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story