இங்கிலாந்து இளவரசராக மும்பை வந்த சார்லசை முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மினி கோலாப்புரே- நினைவலைகளை பகிர்கிறார்


இங்கிலாந்து இளவரசராக மும்பை வந்த சார்லசை முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய   நடிகை பத்மினி கோலாப்புரே- நினைவலைகளை பகிர்கிறார்
x

இங்கிலாந்து இளவரசராக மும்பை வந்த சார்லசை முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மினி கோலாப்புரே தனது நினைவலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

மும்பை,

இங்கிலாந்து இளவரசராக மும்பை வந்த சார்லசை முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மினி கோலாப்புரே தனது நினைவலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

மும்பை வந்த சார்லஸ்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்தை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவி ஏற்றுள்ளார்.

இவர் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மும்பை ராஜ்கமல் சினிமா ஸ்டூடியோ வருகை தந்தார். இந்த தருணத்தில் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

அந்த ஸ்டூடியோவில் இருந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் இளவரசர் சார்லசை வரவேற்க காத்து நின்றனர். சார்லசுக்கு வரவேற்பு அளிக்க ஆரத்தி எடுத்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு நின்ற இந்தி மற்றும் மராத்தி நடிகையான பத்மினி கோலாப்புரே சார்லஸ் அருகே நெருங்கினார். திடீரென அவரது கன்னத்தில் "நச்"சென்று முத்தம் கொடுத்து விட்டார். இது இளவரசர் சார்லசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அங்கு நின்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.இது உலக அரங்கில் தீப்பொறியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னராகி விட்டார்

இருப்பினும் இளம்பெண் ஒருவர் இதுபோன்று நடந்து கொண்டது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்ற எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. இதற்கெல்லாம் நடிகை பத்மினி கோலாப்புரே கவலைப்படவில்லை.

தற்போது அவர் முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார். இந்த தருணத்தில் நடிகை பத்மினி கோலாப்புரேயிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.

அவர் கூறியதாவது:-

மறக்க முடியாது

ராஜ்கமல் ஸ்டூடியோவில் நான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் தற்போது மன்னராகி விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் எனது நினைவுகள் வானத்தில் பறக்கிறது.

இளவரசராக இருந்த சார்லசை முத்தமிடும் தைரியம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது நடந்து விட்டது. அதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றினார் என நினைவில்லை. ஆனால் அது என்னை சிரிக்க வைத்தது. அவருடைய அணுகுமுறையும், நடத்தையும் நட்பாக இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. மறுநாள் காலையில் உலக பத்திரிகைகளில் நான் முத்தமிட்ட படம் முதல் பக்கங்களில் வந்தது. இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

வேடிக்கை செய்கிறார்கள்

ஒரு தடவை நான் இங்கிலாந்து சென்றபோது, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி எனது பாஸ்போர்ட்டை பார்த்தார். அப்போது நீங்கள் தான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நடிகையா? என்று கேட்டார். அப்போது ஆமாம் என்றேன். அதற்கு அவர் வெட்கத்துடன் தலையை தாழ்த்தி கொண்டார்.

இப்போது மன்னர் சார்லசை நீங்கள் எப்படி முத்தமிடுவீர்கள் என்று பலர் வேடிக்கையாக என்னை கேட்டு வருகிறார்கள்.

இவ்வாறு நடிகை பத்மினி கோலாப்புரே கூறினார்.


Next Story