இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புனே,

இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இந்தியா நிலைப்பாடு

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "பாலஸ்தீன மக்களின் நிலம், சுயராஜ்யம் மற்றும் அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைகளுக்காக நீண்டகால ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. அதன்படி எங்களது ஆதரவு தொடரும். இருதரப்பினரும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று புனேயில் செய்தியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. கூறியதாவது:-

அனைத்துக் கட்சி கூட்டம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினையில் இந்தியாவின் கொள்கை எப்போதும் ஒரே போன்று சீரானதாகவே இருந்துள்ளது. இந்திராகாந்தி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் ஒரே மாதிரியான கொள்கை தான் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு வேறுபாதையில் பயணிக்கிறது. வெளிநாட்டு விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் எழும்போது அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். உலகம் தற்போது போரில் சிக்கி உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவேண்டிய அவசியம் உள்ளது. எனவே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story