மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 13 Jun 2023 9:11 PM GMT (Updated: 14 Jun 2023 10:21 AM GMT)

ஒரத்தநாடு அருகே மகனுடன், மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே மகனுடன், மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவிலுக்கு சென்றனர்

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் 3-வது நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 52). இவரும், இவரது மகன் அரவிந்தசாமியும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தென்னமநாடு தேத்தாவடி அய்யனார் கோவிலுக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை அரவிந்தசாமி ஓட்டினார்.

தவறி கீழே விழுந்தார்

தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, புதூர் பைபாசில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஜெயந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஜெயந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

சோகம்

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனுடன் கோவிலுக்கு சென்ற பெண், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story