தோவாளை மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி 175 டன் பூக்கள் விற்பனை


தோவாளை மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி 175 டன் பூக்கள் விற்பனை
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் 175 டன் பூக்கள் விற்பனையானது.

கன்னியாகுமரி

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

பூக்களின் விலை ஏறி இறங்கும் தன்மை உடையது. இதனால் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் விலை குறைவாக காணப்படும்.

பிச்சிப்பூ...

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜை என்பதால் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.750-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.250 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோல் தாமரை ஒரு பூ ரூ.15-ல் இருந்து ரூ.10 உயர்ந்து ரூ.25-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.450, மல்லிகை ரூ.900, சம்பங்கி ரூ.250, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.150, துளசி ரூ.40, கோழிப்பூ ரூ.70, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.320, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ.90, சிவப்புக்கேந்தி ரூ.120, சிவந்தி மஞ்சள் ரூ.160, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.120 என விற்பனையானது.

175 டன் விற்பனை

இதற்கிடையே நேற்று தோவாளை பூ மார்க்கெட்டுக்கு 200 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் 175 டன் பூக்கள் விற்பனையானதாக பூ வியாபாரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.


Next Story