சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு


சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு
x

கோப்புப்படம் 

தீபாவளியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு, கூடுதல் கவனங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்ப்பத்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.

தி.நகர் பகுதியில் 6 இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சிகளில் கண்காணிக்கும் போது, பழைய குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது. தி.நகர் பகுதியில் 17 போலீசார் தங்களது சீருடையில் அணியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் குற்றச்செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர்.

தி.நகர், பூக்கடை பகுதிகளில் தலா 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை மற்றும் உதவி மையங்கள், வண்ணாரப்பேட்டை, எம்.சி. சாலையில் 4 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் புரசைவாக்கம் பகுதியில் 1 தற்காலிக கட்டுப்பாட்டு அறை என 11 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

மேலும், போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில், வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் 5 டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் 6 அகன்ற எல்.இ.டி. திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்போலீசார் பணி அமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


Next Story