ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்பு


ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்பு
x

ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரில் இருந்து நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அவர்கள் நேற்று மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது, கடல்சீற்றத்தில் சிக்கிக்கொண்டனர்.

கடல் சீற்றம் காரணமாக அவர்களது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடலில் தத்தளித்த இரு மீனவர்களை சக மீனவர்கள் மீட்ட நிலையில், மற்ற இருவரும் கடலில் மாயமாகினர்.

இதையடுத்து மாயமான மலைச்செல்வம் மற்றும் முனியசாமி என்ற இரு மீனவர்களையும் தேடும் பணியில் மீனவர்களும், கடலோர காவல் படையினரும் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாயமான இரு மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் இரு மீனவர்கள் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story