தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 2 நரி குட்டிகள் பறிமுதல்


தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 2 நரி குட்டிகள் பறிமுதல்
x

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 2 நரி குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடைமைகளில் ஏதோ லேசாக அசைவதுபோல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள், அவரிடம் இருந்த பையைத் திறந்து பாா்த்தனா். அதில் 2 அரிய வகை நரி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை நரி குட்டிகள். இதை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதால் எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவை அவரிடம் இல்லை.

மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 2 குட்டிகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது, 2 நரி குட்டிகளும் அபூர்வ வகையை சேர்ந்தது என்பதும், வடஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பெனின்சுலா பகுதியிலும், மேற்கு சகாரா பாலைவனத்தை பூர்வீகமாக கொண்ட பென்னஷ் பாக்ஸ் என்ற நரி இனத்தை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நரி குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story